ஞாயிறு காலை, புல்லின் மீது பனித்துளி காதல் கொண்டிருந்த நேரம், ஜன்னலின் வழியே வந்த பனிக்காற்றை ரசித்துக் கொண்டே நித்யா விஸ்வாவை அழைத்தாள்.
" ஹலோ..."
"டேய் சோம்பேறிக்கழுதை இன்னும் என்னடா தூக்கம்?"
"ஹ்ம்ம்... உனக்கு வேற வேலையே இல்லையா? கோழி மாதிரி காலைலையே கூவி தூக்கத்த கொடுக்கற"
" என்னது நா கோழியா? , இதுவே வினிதா கூப்பிட்டு இருந்தா இப்படி சொல்லுவியா? பல்ல இளிச்சுகிட்டு பேசி இருப்ப"
"ஐயோ ஆத்தா காலைலையே வேண்டாம், என்னனு சொல்லு"
"இன்னைக்கு உனக்கு பிரேக்பாஸ்ட் எங்க வீட்டுலனு தெரியாதா? சீக்கரம் கிளம்பி வா"
"உங்க அம்மா சமையல் தான? என்ன கொல்ல நீ சதித்திட்டம் எதுவும் பண்ணலல"
"ச்சீச்சீ அந்த கெட்டப் பழக்கத்தை எல்லாம் நான் கத்துக்க மாட்டேன் நீ சீக்கரம் கிளம்பி வா"
ஒரே கல்லூரி ஒரே வகுப்பு. விஸ்வா கல்லூரியின் அருகில் அறை எடுத்துத் தங்கி இருந்தான், நித்யாவிற்க்கு அதுதான் சொந்த ஊர். ஒவ்வொரு ஞாயிறு காலையும் விஸ்வாவிற்க்கு உணவு நித்யாவின் வீட்டில், இன்று சற்று நேரம் ஆனதால் இந்த அழைப்பு. அவர்கள் இருவரையும் காதலர்கள் என்றுதான் நம்பி இருந்தனர் மற்றவர்கள் விஸ்வா வினிதாவை காதலிக்கும் வரை.
நித்யாவின் வீட்டில் "இங்க பாருபா, இவங்க அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பாக்கலாம் அப்படினு சொன்ன இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடிக்கறா"
"ஓ..! இப்ப இந்த கூத்து வேற ஆரம்பிச்சுட்டிங்களா, ஆமாங்கமா இப்பவே ஒருத்தனோட வாழக்கைய கொடுமையாக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல இளிச்சவாயன பாத்து தள்ளிவிட்டுவிடலாம்."
"டேய் நீ அடிவாங்க போற இப்ப, உன்ன கட்டிக்கப் போறவளோட வாழ்க்கை தான் கொடுமையாகப் போகுது சரியா... எனக்கு சூரியா மாதிரி ஒருத்தன் கிடைப்பான். உனக்குத்தான் மோகினி பிசாசு கிடைச்சு இருக்கு. அம்மா நீ பிசாசுங்க குடும்பம் நடத்தறதப் பாக்கப்போற"
"ஏய் அவளைப்பத்தி பேசாதனு எத்தனதடவ உனக்கு சொல்றது. அம்மா நீங்க ரெண்டு ஜந்துக்கள் குடும்பம் நடத்தறதத்தான் பாக்கப்போறிங்க"
"நீதான்டா ஜந்து அம்மா இங்க பாருமா என்ன ஜந்துனு சொல்றான்"
"அடடா நீங்க ரெண்டு பேரு எப்படித்தான் பிரண்ட்ஸா இருக்கறீங்களோ. எப்பப்பாத்தாலும் சண்டை. அவன் சாப்பிடுற வரைக்கும் கொஞ்சம் அமைதியாத்தான் இரேன்டி"
அப்போது அவனது தொலைபேசி அழைக்க, அதில் வினிதா. பேசிய படியே வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.
"மெதுவா சப்பிடுடா, எதுக்கு இப்படி அவசரமா கொட்டிட்டு இருக்க?"
"இல்ல நித்தீ, ஏதோ அவசரமா வினிதா வரச்சொன்னா அதனால தான்"
"அதுதான பாத்தேன். டேய் கண்ணா கொஞ்சம் உன்னோடக் காதல சீக்கிரம் முடிச்சுட்டு வாடா. சாயங்காலம் எனக்கு துணி எடுக்கப் போகணும்"
"சரி சரி... சீக்கிரம் வர்றேன்"
மாலை நேரமாகியும் விஸ்வா வரவில்லை. அவனது தொலைபேசியை அழைத்தபோதும் அவன் கிடைக்கவில்லை. சில நாட்கள் கல்லூரிக்கும் அவன் வரவில்லை. என்னவென்று நித்யா அறியமுயன்றபோதுதான் அந்த செய்தி அவளுக்கு தெரியவந்தது. ஏதோ சிலக் காரணங்களால் வினிதா அவனை விட்டு விலகிவிட்டாள் என்பது. இதனைக் கேட்டதும் அவள் மனம் ரணமானது. தனது நண்பனுக்கு இப்படி ஒரு நிலைவருமென நினைத்துப்பார்க்கவில்லை அவள். விஸ்வாவிடம் பேசி காரணத்தை அறிய முயற்ச்சித்தாள். ஆனால் அவன் இப்போதெல்லாம் அதிகமாக யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவளிடமும் கூட சரியாக அவன் பேசவில்லை. இதனைப் பற்றி அவள் பேச முற்ப்படும் போதெல்லாம் அவன் தவிர்த்தான். பல நாட்கள் முயன்று வினிதாவிடம் பல முறை பேசியும் அவளால் வினிதாவின் மனதை மாற்ற முடியவில்லை. தங்களுக்குள் எந்த ஒரு உறவுமில்லை என முடிவாக வினிதா கூறிவிட்டாள். சில வாரங்கள் இப்படியே சென்றன.
விஸ்வா யாரிடமும் சரிவர பேசுவதில்லை. கல்லூரிக்கு சரிவர வருவதில்லை. இதனால் நித்யாவிற்க்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவனை எப்படி இந்தச் சூழலிருந்து மீட்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவனது நிலை இன்னமும் மோசமாகிக் கொண்டுதானிருந்தது. ஒரு வார இறுதியில் அவனது தொடர்பு கொண்டாள்.
"ஹலோ"
"ஹலோ, நித்யா நா சிவா பேசறேன், விஸ்வா தூங்கிட்டு இருக்கான்"
"சிவா, விஸ்வா கிட்ட பேசணும் கொஞ்சம் அவன எழுப்பி அவன்கிட்ட கொடு ப்ளீஸ்"
"இல்ல நித்யா அவ இப்ப பேசற மாதிரி இல்ல, நீ நாளைக்கு காலைல கூப்பிடு"
"இல்ல, இப்பவே பேசணும்"
"இல்ல நித்..யா, அவன் இப்ப பேச..."
"உண்மையச் சொல்லு சிவா, அங்க என்ன நடக்குது?"
"அவ கொஞ்ச நாளா குடிக்க ஆரம்பிச்சு இருக்கான். நா என்ன சொல்லியும் கேட்காம எனக்குத் தெரியாம போய் குடிச்சுட்டு வர்றான்."
"என்ன குடிக்கறானா? இதை ஏன் எங்கிட்ட நீ முன்னமே சொல்லல"
"அவன் தான் இதப்பத்தி உங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னான்"
"அவன் சொன்னா? என்ன சிவா நீ?, சரி அவன நா நாளைக்கு பாக்க வர்றேன்னு சொல்லு"
"ஹும்ம் சரி.."
விண்கல் மோதி கட்டுபாடு இழந்து திசை மாறிப் போய்விடும் விண்கலம் போல விஸ்வாவின் வாழ்க்கை எங்கோ திசை மாறிப் போவது அவள் கண்களில் தெரியத்துவங்கியது. என்னவிலை கொடுத்தேனும் அவனை நல்வழிப்படுத்த வேண்டுமென முடிவெடுத்தாள்.
அடுத்த நாள், அருகில் இருக்கும் கோவிலில் நித்யா மற்றும் விஸ்வா...
"என்னடா வர வர உன்னோட நடவடிக்கை எல்லாம் சரி இல்ல. ஒழுங்க கல்லூரிக்கும் வர்றது இல்ல என்கிட்டக் கூட சரியா பேசறது இல்ல... வீட்டுக்கும் வர்றது இல்ல...என்னடா ஆச்சு உனக்கு?"
"எனக்கு ஒண்ணும்மில்ல நித்யா. நா எப்பவும் போலத்தான் இருக்கேன். அப்புறம் வீட்ல அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க. மாப்பிள்ளைத் தேடுறது எல்லாம் எப்படிப் போகுது"
"டேய் என்ன நான் ஒண்ணு கேட்டா நீ ஏதோ பேசற... விடு விஸ்வா வினிதாக்கு கொடுத்துவெச்சது அவ்வளவுதான். உன்ன மாதிரி ஒருதன் கிடைக்க ஒரு பொண்ணு கொடுத்துவெச்சு இருக்கணும்"
"சீச்சீ அதுக்காக வினிதா மோசம்னு சொல்லாத நித்தீ, அவ ரொம்ப நல்லப் பொண்ணுனு உனக்கும் நல்லாத் தெரியும். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, என்னோட விதின்னு தான் சொல்லணும்"
"சரி இவ்வளவு பேசற நீ எதுக்காக வருத்தப்படணும். அவ போனா போயிட்டு போறான்னு விட வேண்டியதுதான. வீணா மனசையும் ஒடம்பையும் எதுக்கு கெடுத்துக்கற? நா ஒண்ணு கேட்ட தப்பா எடுத்துக்கமாட்டையே"
"என்ன நித்தீ, வினிதா என்ன விட்டு போனதுக்கு அப்புறமும் கூட பொண்ணுங்க மேல எனக்கு இன்னும் மரியாதை இருக்குன அதுக்கு முழுக் காரணமும் நீதான். இதோ இப்பக் கூட ஒரு பொண்ணா வினிதாவுக்கு பேசம ஒரு நல்ல தோழியா எனக்குத்தான் சப்போர்ட் பண்ற. எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் நித்தீ."
"என்ன எந்தளவுக்கு புடிக்கும், வினிதாவ விடவா?"
"என்னபாது சின்னக் குழந்தை மாதிரி. இதோ இப்ப எனக்கு ஆறுதல் சொல்றது நீதான். தன்னோட சுயநலத்திற்க்காக என்ன விட்டுட்டுப் போன வினிதாவ விட உன்ன எனக்குப் பிடிக்கும் போதுமா?"
"அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்குவியா?"
"ஏய்... என்ன இது...லூசா நீ... நாம ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். மத்த நண்பர்களும் அப்படித்தான் நினைச்சுட்டு இருக்காங்க, அப்படித்தான் உன் வீட்டுலையும் நினைச்சுட்டு இருக்காங்க."
" உனக்கு ஒண்ணு தெரியுமா எங்க வீட்டுலக் கூட எப்படிபட்ட மாப்பிள்ளை பாக்கறதுன்னு கேட்டதுக்கு உன்ன மாதிரி வேணும் சொல்லி இருக்கேன். இதோ இப்பக் கூட என்ன கட்டிக்க போறவன் கொடுத்துவெச்சவன்னு நீ சொல்ற, உன்ன கட்டிக்கப் போறவ கொடுத்துவெச்சவன்னு நான் சொல்றேன். புதுசா ஒருத்தங்கள நாமா தேடுறதுக்கு ஏன் நம்ம ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. எனக்காக நீ நிறைய உதவி பண்ணி இருக்க, உனக்கு நானும் உதவி பண்ணி இருக்கேன். இப்பா கூட நீ நல்ல இருக்கணும்னு நான் நினைக்கறேன் நான் நல்ல இருக்கணும்னு நீ நினைக்கற. உன்னோட சந்தோசத்துக்கு நானும் என்னோட சந்தோசத்துக்கு நீயும் காரணம இருக்க நினைக்கறது என்ன தப்பு? இது நீ கஷ்டப்படுறத பாத்து எடுத்த முடிவு இல்ல விஸ்வா. கொஞ்ச நாளாவே என்னோட மனசுக்கு இந்த முடிவு நல்லா இருக்குனு தோனிச்சு அதுதான் என்னோட விருப்பத்த சொன்னேன். இப்ப கூட உன்ன நான் கட்டாயப்படுத்தல, என்ன உனக்கு உண்மையாலுமே புடிச்சு இருந்தாச் சொல்லு. சரி, நான் கிளப்பறேன். நாளைக்கு காலைல சாப்பிட எங்க வீட்டுக்கு வா இதுக்கு மேலையும் உன்ன கஷ்டப்படுத்திக்காத அப்புறம் என்னையும் கஷ்டப்படுத்தாத"
பேசிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
இப்போது கூட தனது கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனம், தன்னைக் கட்டாயப்படுத்த நினைக்காத ஒரு மனம்,எப்போதும் தனக்கு ஆறுதலாய் மட்டும் இருக்க ஆசைப்படும் ஒரு மனம். என்றுமே தனக்கென்று எதனையும் கேட்காது அவனுடைய நலத்தினை மட்டும் கேட்கும் ஒரு மனம். இப்படி ஒரு மனதை அருகில் இருந்தும் இந்நாள் வரை அறியாமல் விட்டுவிட்டோமே என அவன் நினைக்கத் துவங்கினான். கையில் இருந்த பெட்டகத்தில் மின்னிய முத்தினை இன்று வரை அறியாமல் எப்படி இருந்தோம் என அவன் நினைத்தான். கோவிலில் மணி அடித்தது.
அடுத்த நாள் காலை நித்தியாவின் வீட்டில்
"இங்க பாருபா, இவங்க அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பாக்கலாம் அப்படினு சொன்ன இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடிக்கறா" என வழக்கமாக அவளது அம்மா விஸ்வாவிடம் முறையிட்டாள்.
"மா உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிளைய நானே பாத்துவெச்சு இருக்கேன். அவன் என்னை மாதிரியே இருப்பான். நீங்க கவலைப்படாதீங்க"
என அவளைப் பார்த்துச் சிரித்தவாறு கூறினான்.
"உன்ன மாதிரியேவா, ஹும்ம் எனக்கு தெரியாதுனு நினைச்சய, நித்யா எல்லாத்தையும் எங்ககிட்ட சொல்லிட்டுதான் உன்கிட்டவே பேசினா, எனக்கும் அது சரினுபட்டது அவளுட அப்பாவுக்கும் இதுல முழு சம்மதம்தான்பா ஆனா அவ உன்னோட சம்மதம் இல்லாம இதபத்தி நாங்க யாரும் பேசக்கூடாதுனு சொல்லிட்ட. அவளே கேட்டு சொல்றனு சொல்லி இருந்தா. எங்க நாங்க இத கேட்டு உன்னோட மனசு வருத்தப்படுமோனு நாங்களும் அவ இஷ்டத்திற்க்கே விட்டுடோம். இப்ப எங்களுக்கும் மனசு சந்தோசமா இருக்கு"
"தன்னை, தனது நலத்தையும் நேசிக்கும் ஒரு பெண்ணை மட்டும்மல்ல ஒரு குடும்பத்தினரையும் அவன் நேசிக்கத்துவங்கினான்"
"நட்பு அழகு, அதனினும் காதலுக்குள் களவு போன நப்பு பேரழகு"
... இடுக்கண் களைவதாம் நட்பு
Subscribe to:
Posts (Atom)