படிக்கும் காலத்தில் இரவு நேரங்களில் இந்த வானொலியைக் கேட்டுக் கொண்டு தூங்குவதில் அப்படி ஒரு அலாதியப் பிரியம். அப்படி நான் ரசித்த சமயங்களில் எனக்குள் எழுந்த சில வினாக்கள்??????
வானொலியில் இந்த இல்லறத் தம்பதிகள் பேசும் நிகழ்ச்சிகள் நிறைய கேட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும் கேள்வி, "குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? " அதற்கு அனைத்து தம்பதிகளும் சொல்லும் ஒரே பதில் " எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கும்". இதனைக் கேட்கும் போது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மனிதனாகப் பிறந்து விட்டு எதிர்பார்ப்பே இல்லாமல் எப்படி வாழ்வது என்பதுதான்? இத்தகைய பதிலை புதுமணத் தம்பதிகள் கூறி இருந்தாலும், அனுபவம் பத்தவில்லை என நினைத்துக் கொள்ளலாம், ஆனால் முப்பது வருட இல்லற வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இதனையேதான் சொல்கின்றனர்.
ஒரு மனிதன் பிறந்தது முதல் கடைசி மூச்சுள்ள வரை இந்த உலகில் ஏதோனும் ஒன்றை எதிர்பார்த்து தான் வாழ்கிறான். அப்படி இருக்க எப்படி தனது மனைவி/ கணவனிடம் எதிர்பார்ப்பே இல்லாமல் வாழ்வது. திருமணம் என்பதே ஆண்/பெண் இருவரிடத்தும் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்குகின்றது அப்படி இருக்க திருமணம் முடிந்தது எப்படி எதிர்பார்க்காமல் இருக்க முடியும்?
திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய அதிக எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும், அப்போதுதான் வாழ்க்கை சுவாரிசயமாக செல்லும், இல்லையெனில் சலித்துப் போகும். சில சமயங்களில் எதிர்பார்ப்பவை அனைத்தும் நிறைவடைந்து விடுவதில்லை. அப்படி இருக்கும் போது ஏமாற்றமடையாமல் இருந்தால் பிரச்சனை எதுவும் உருவாகாது. ஆகையால் வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பும், குறைந்த ஏமாற்றமும் இருந்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாகும்.
அட என்னடா இவன் லூசுத்தனமா எதிர்பார்ப்பு இருக்க வேண்டும் ஏமாற்றம் இருக்க கூடாது, எதிர்பார்ப்பு நிறைவடையவில்லை என்றால் ஏமாற்றம் தானே மிஞ்சும்னு நினைக்கறது புரியுது.
உங்க வீட்டுக்காரி கிட்ட இன்னைக்கு உங்களுக்கு புடிச்ச வெரைட்டிய சமைக்க சொல்லிட்டு நீங்க உத்தியோகத்திற்க்கு போறிங்க, இரவு திரும்பி வந்து பாத்தா எப்பவும் சமைத்து வைப்பதையே சமைத்து வைத்துவிட்டு உங்க மனைவி உடல்நிலை சரி இல்லைனு படுத்துவிட்டால், இவளுக்கு எப்ப பாத்தாலும் நா எனக்கு புடிச்சத சமைக்க சொன்னா மட்டும் உடம்பு சரி இல்லாம போயிடுதுனு நினைத்து ஏமாற்றமடையாமல், அட நம்ம பொண்டாட்டி நமக்கு சமைக்காம வேற யாருக்கு சமைக்க போறா? இன்னைக்கு இல்லைனா நாளைக்கு சமைத்து கொடுக்க போறானு நினைத்தால் ஏமாற்றம் இருக்காது.
அடுத்தது உங்க வீட்டுக்காரர் கிட்ட உங்கள இன்னைக்கு சாயங்காலம் தசாவதாரம் படத்துக்கு கூட்டிட்டு போகச் சொல்றிங்க ஆனா அவர் கொஞ்சம் வேலை இருக்குமா, இந்த வாரம் வேண்டாம் அடுத்த வாரம் போகலாம்னு சொல்றார்னு வைங்க, இந்த மனுசனுக்கு எப்ப நாம படத்துக்கு போகலாம்னு நினைக்கறமோ அப்பதான் வேலை அதிகமா இருக்கும்னு நினைக்காம, நம்ம புருசன் நம்மள படத்துக்கு கூட்டிட்டு போகாம பக்கத்து வீட்டுல இருக்கறவளைய கூட்டிட்டு போகப்போறாரு, இந்த வாரம் இல்லன என்ன அடுத்த வாரம் கூட போகலாமே, எப்படி இருந்தாலும் தசாவதாரம் வருசக்கணக்கில் ஓடத்தான போகுதுனு நினைத்தால் ஏமாற்றம் இருக்காது.
குடும்பமும் சில குளறுபாடுகளும்.
அங்கமெல்லாம் அழகானவள்
காதல் கரையோரத்தில் கடலுக்குள் களவு போக கதிரவன் காத்திருந்த நேரம், கண்மணி உன் கயல்விழிக்குள் களவு போன என் காதலுடன் நான் காத்திருக்கிறேன்.கடற்க்காற்றில் கரைந்து கொண்டிருந்த மணலில், மலர் வாசம் வீச ஆரம்பித்ததும் அறிந்து கொண்டேன் அசைந்தாடும் தேராய் அருகில் நீ வந்துவிட்டாய் என்பதை.கனவில் கண்ட தேவதையை கண் எதிரே கண்டதும் கடல் அலையென துள்ளிக் குதித்தது. உன்னை காண ஓடி வரும் ஒவ்வொரு அலையும் உன்னைக் கண்ட வெட்கத்தில் மீண்டும் கடலிக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறது. உன்னைக் கண்டதும் நிலவு உதித்துவிட்டதென நினைத்து கதிரவனும் கடலுக்குள் மறையத் துவங்கினான்.உனது பாதச்சுவட்டின் மீது கால் பதித்து நான் நடந்துவிடுவேன் என்பதால் விரைந்து வந்து அலைகள் அதனை அழித்துக் கொண்டிருந்தது.உன் விரல் பட்டதும் கடல் நீர் தேனீராய். நீ கட்டிய மணல்வீட்டை ஆராய்ந்த தொல்பொருள் நிபுணர்கள், இது தேவதைகள் காலத்தை சார்ந்த ஒரு தேவதை கட்டியது என அறிவித்தனர், பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க பரிந்துரையும் செய்தனர். உன்னைக் கடற்க்கன்னியென நினைத்து நண்டுகள் எல்லாம் தவறி வேறு எங்கோ சென்றுவிட்டோமென நினைத்து கடலை விட்டு வெளியே வருகின்றது.கலங்கரை விளக்காய் உன் காதோர கம்மல் மின்ன கப்பல்கள் எல்லாம் கரையோரம் ஒதுங்கத் துவங்கியது. உனது செயல்களை எல்லாம் எழுத்தில் வடித்தது, கிடைத்து விட்டதடா ஒரு அழகியக் கவிதை என சொல்லிச் சென்றான் எனதருகில் இருந்த கவிஞன் ஒருவன். மணல்களை அள்ளித் தூவுகிறாய், என்மேல் அவை மல்லிகைப்பூக்களாய். வலை வீசி மீன் பிடித்தான் மீனவன் நீயோ விழி வீசிப் பிடித்தாய் என்னை.நடை பழகிய குழந்தை ஓய்ந்து தாய் மடி தேடுவது போல் என் தோள் சாய்ந்தாய். முழுநிலவை சுமந்த சுகத்தை அனுபவித்தது தோள்.தேன் சிந்தும் பூவானாய்.
"டேய் லூசு"
"சொல்லுடி லூசு"
"நா கேள்வி கேட்பனாமா, நீ பதில் சொல்லுவியாமா"
"விழிகளில் மட்டும் கேட்டு விடாதே! இதயம் இயங்காத சமயங்களில் உதடுகள் அசையாதாம்"
"சரி சரி, ஆரப்பிச்சுடாத... எதுக்குடா லூசு மாதிரி என்னோட பொறந்த நாளா என்னமோ உன்னோட பொறந்த நாள் மாதிரி கொண்டாடுற?"
"நீ பிறந்தபோது தான் நானும் பிறந்தேன்"
"அது எப்படி, பொய் சொல்லாத"
"ஹ்ம்ம்ம்... நீ பிறந்த அன்றே என் காதலும் பிறந்தது, என் காதல் பிறந்த அன்று நான் மீண்டும் பிறந்தேன், அப்ப உன்னோட பிறந்த நாள் என்னோட பிறந்த நாள்தான"
"சரி அத விடு, என்ன பத்தியே எப்பவுமே நீ நினைச்சுகிட்டே இருக்கியே உனக்கு சலித்துப் போகாதா?
"குழந்தையின் சிரிப்பை பார்த்து கண்கள் ஓய்ந்து போகாதடி கண்மணி"
"ஹ்ம்ம்... டக்குனு ஒரு கவிதை சொல்லு"
"டக்"
"நீ என்ன லூசாடா, "டக்" எப்படி கவிதையாகும்?"
"நீ போசும் அனைத்தும் கவிதைகள், கடவுள் எழுத நினைத்த கவிதைகள் அனைத்தும் உனது உதடுகளில்"
"நா என்ன சொன்னாலும் அதை கவிதனு சொல்லாதடா குட்டி"
"கவிதையைக் கவிதை என் சொல்லாமல் வேறு எப்படி சொல்வதாம்"
"பொய்தானா, வேற ஒருத்தன் எழுதிய கவிதையத் தானா என்னோட கவிதைனு சொல்ற"
"ஆம்! களவாடியக் கவிதைகள் தான் அனைத்தும் உன்னிடமிருந்து"
"ஓ!!!,உன்னோட கவிதை எல்லாம் என்னோட புற அழகதான வர்ணிக்குது, அப்ப நீ என்னோட மனச காதலிக்கிறேனு சொல்றது பொய்தான?"
"அது எப்படி பொய்யாகும்?"
"ஆமா, முகம் அழகா இருக்கு, கண் அழகா இருக்கு, கை அழகா இருக்கு தான சொல்ற, மனசு அழகா இருக்குனு சொல்றையா?"
"ஐயோ!!! நீ சரியான லூசுடி, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அப்படினு படிச்சதில்லையா?"
"அப்படினா நீ முகத்த மட்டும்தான வர்ணிக்கனும்"
"உன் மனதின் அழகை முகமட்டும் கொள்ள முடியாமால் உடல் முழுவது வழிந்தோடுவதால், உனது அங்கங்கள் முழுவது உன் அகத்தின் அழகு தேங்கிக் கிடக்கின்றது"
"எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்கற"
"ஹுக்கும், காண்பதைச் சொல்ல உதடுகள் அசைந்தால் மட்டும் போதுமடி என் பூனைக் குட்டி"
"இப்ப நீ பதில் சொல்ல முடியாத கேள்வி ஒன்னு நான் கேட்கப் போறேன்"
"விடையையும் கொடுத்துவிடும் நீ இருக்க நான் எப்போது தோற்க்க மாட்டேன்"
"அப்ப நாந்த எப்பவும் தோக்கறனா?"
"என்னில் சரிபாதி நீ இருக்க நீ எப்போதும் தோற்ப்பதில்லை"
"இந்த கேள்விக்கு பதில் சொல்லு பாக்கலாம், நா முதல்ல இறக்க வேண்டுமா?? இல்ல நீ இறக்க வேண்டுமா?"
"..."
"என்ன இப்ப மாட்டிகிட்டியா?"
"இல்லடா செல்லம், நீ தான் முதலில் இறக்க வேண்டும்"
"நானா? ஏ"
"என் காதல் கூட உன்னைக் காயப்படுத்தாது கண்மணியே"
"அப்ப நீ மட்டும் உயிரோட இருப்பியா?"
"வேருக்கு தீ வைத்த பின் விழுதுகள் வாழ்வதில்லை"
"அப்ப நம்ம காதல் செத்துடுமா?"
"கடவுள் காணாமல் போவதில்லை"
விழிகளில் கண்ணீருடன் என்னை கட்டிக் கொள்கிறாய்,தாய்க் கருவறையின் காரிருள் எனது கண்களில்...